பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34.
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்து வளர்ந்த சுஷாந்த் சிங், பொறியியல் பட்டதாரி ஆவார். இளவயதிலேயே படிப்பில் சுட்டியான சுஷாந்த், சீரியல் நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் 'தேஷ் மேன் ஹாய் மேரா தில்' என்ற தொடரில் முதன் முதலில் நடித்தார். பின் 2009-ம் ஆண்டு பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம் கவனம் பெற்றார். இந்தத் தொடர் அவருக்கு விருதையும் பெற்றுத்தந்தது. பின்னர் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் (3 mistakes of my life) நாவலை மையமாக கொண்டு கடந்த 2013 ல் உருவான கை போ சே (Kai po Che) என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பீ.கே.(PK), கேதார்நாத், ட்ரைவ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படத்தில் தோனியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார் சுஷாந்த். அண்டோல்டு ஸ்டோரி படம் மூலம் கவனம் பெற்றார்.
கடந்த 2019ல் ஷ்ரத்தா கபூரூடன் இணைந்து சுஷாந்த் நடித்திருந்த 'Chhichhore' படத்தின் விமர்சனங்கள் சுஷாந்தின் நடிப்பை பாராட்டியிருந்தன. முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சஞ்சனாவுடன் இவர் நடித்துள்ள 'Dil Bechara' படம் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக அந்தப் படம் தயாராகியிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால், அந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சுஷாந்தின் மறைவு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.