மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும், என்று கூறிய பெண் ஊழியரை ஆந்திர சுற்றுலாத்துறை துணை மேலாளர் கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சுற்றுலா துறை விடுதியில், துணை மேலாளராக பணியில் இருப்பவர் பாஸ்கர் ராவ். அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் வேலை விஷயமாக, பாஸ்கர் ராவ் பேசினார். அப்போது முகத்திற்கு கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அணியாமல் தங்களிடம் பேசக்கூடாது என்றும், உஷாராணி அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ், அந்தப் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அலறி துடித்துக் கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை உதைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தர்க்கா மிட்டா காவல் நிலையத்தில், உஷாராணி அளித்த புகாரின் பேரில், துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.