காவிரி- வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அலுவலகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து ரூபாய் 7,677 கோடி திட்ட மதிப்பீட்டில் கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டில் இருந்து புதுக்கோட்டை வெள்ளாறு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்துவதற்கு ரூபாய் 700 கோடி நிதியை அரசு கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிட்டது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்திற்கான காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் அலுவலகத்தை புதுக்கோட்டையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் என 50 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.