அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவருக்கு இறுதி வாய்ப்பு


பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் படித்து, 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு சிறப்புத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்புத் தேர்வு வழக்கமான பருவத் தேர்வோடு நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறவிருந்த மற்றொரு தேர்வு கரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு தேர்வு குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


கரோனா தாக்கம் குறைந்து,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதும் வழக்கமாக நடைபெறும் பருவத் தேர்வுடன் சிறப்புத் தேர்வு நடக்க உள்ளது. சிறப்புத் தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழகத்தின் www.coe1annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம்.